திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த “வீடியோ’ சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; “வீடியோ’ சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.


இவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர். இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை “வீடியோ’ சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று “வீடியோ’ சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

 போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் “வீடியோ’ சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.

லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட”வீடியோ’ சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.

லஞ்சம் வாங்கவில்லை; டி.எஸ்.பி., உறுதி: டி.எஸ்.பி., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது; பிரபாவதி வழக்கு விசாரணை தொடர்பாக, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணன், இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு பரிச்சயமாகி உள்ளார். அவர்களது கடையில் மொபைல் போன் சர்வீசும் இருந்ததால், தனது பழுதடைந்த மொபைல் போனை சரி செய்யவே, அவர் அக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுப்ரமணியம், படம் பிடித்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி மிரட்டியுள்ளார். பிரபாவதி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட சரவணனிடம் பணம் கேட்டு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ போலீசாருக்கு வாய்ப்பு இல்லை.


-நன்றி- -தினமலர்-